UAE: பார்வையாளர்களுக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ள “துபாய் சஃபாரி பூங்கா”..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள பூங்காக்களில் மிகப்பெரிய பூங்காவும், பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட துபாய் சஃபாரி பூங்கா (Dubai Safari Park) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி இன்று (அக்டோபர் 5) முதல் புதிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
துபாய் சஃபாரி பூங்காவின் வசதிகளை விரிவுபடுத்துவதையும், பார்வையாளர் அனுபவத்தை மேலும் வளமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு செயல்முறை தற்போது நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து இந்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுப்பிக்கப்பட்ட துபாய் சஃபாரி பூங்கா ஒரு முன்னணி உலகளாவிய சுற்றுலா மையமாக அமீரகத்திற்கு மேலும் ஒரு புதிய மதிப்பை சேர்க்கிறது என்றும் துபாய் முனிசிபாலிடி கூறியுள்ளது.
119 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த துபாய் சஃபாரி பூங்காவில் 3,000 பாலூட்டி இனங்களும், பறவைகள், முதுகெலும்பற்ற உயிரினங்கள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. மேலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த வசதிகள் பார்வையாளர்கள் எளிதாக அனைத்து தளங்களையும் அணுகுவதற்கு ஏதுவாக பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சுற்றுலா சந்தை கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு வரும் வேளையில், துபாய் சஃபாரி பூங்காவும் சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஒரு அற்புதமான ஈர்ப்பை வழங்கவிருக்கிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட துபாய் சஃபாரி பல தனித்துவமான திட்டங்களைக் கொண்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவத்தை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான விலங்குகளை அவர்களால் பார்க்க முடியும் என்பது மட்டுமல்லாமல், செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை ரசிக்கவும், பார்வையாளர்களுக்கு கல்வி கற்பிக்கவும் முடியும்” என்று துபாய் நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
டிக்கெட் விலை
General Admission – பெரியவர்களுக்கு 50 திர்ஹம்ஸ்; குழந்தைகளுக்கு 20 திர்ஹம்ஸ்
Safari Journey – பெரியவர்களுக்கு 85 திர்ஹம்ஸ்; குழந்தைகளுக்கு 30 திர்ஹம்ஸ்
View this post on Instagram