இந்தியா: சர்வதேச விமான போக்குவரத்து தடை மறுஅறிவிப்பு வரும் வரையிலும் நீட்டிப்பு…!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை பிப்ரவரி 28 வரை நீட்டித்திருந்த நிலையில் இந்த தடையை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது.
இருப்பினும், சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு இயக்கப்படும் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கும் இந்த தடை பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து கடந்த மார்ச் 23, 2020 முதல் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து சர்வதேச விமானங்களும் தடை செய்யப்பட்டன.
மேலும் இந்த விமானத் தடை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் துவங்கவிருப்பதாக இந்திய அரசு முதலில் அறிவித்திருந்தது.
பின்னர் ஓமிக்ரான் வைரஸ் பரவலால் இந்த முடிவு ஒத்தி வைக்கப்பட்டு தற்பொழுது மறு அறிவிப்பு வெளியிடும் வரையிலும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதன் காரணமாக அந்நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
— DGCA (@DGCAIndia) February 28, 2022