துபாயில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் ஒருவர் உயிரிழப்பு…!! 14 பேர் காயம்…!!
துபாயில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்த தனித்தனி மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் ஒரு வாகன ஓட்டி இறந்துள்ளார் மற்றும் நான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. துபாயில் பதிவாகிய மேலும் மூன்று விபத்துகளில் 10 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாக போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செயல் இயக்குநர் கர்னல் ஜுமா சலீம் பின் சுவைதான் தெரிவித்தார்.
அந்த வாகன ஓட்டி வேகமாகச் சென்றதால், முன்னால் மற்றொரு வாகனம் திடீரென நின்று பின்நோக்கி ஓட்டி எக்ஸிட் நோக்கி சென்றதை கவனிக்கத் தவறியதாகவும் இதனால் விபத்து ஏற்பட்டு இறந்ததாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.
மேலும் இந்த ஆண்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பாக ஏற்பட்ட விபத்துக்களில் ஏற்படும் நான்காவது மரணம் இதுவாகும். இந்த வார தொடக்கத்தில், 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 46 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 47 பேர் காயமடைந்ததாகவும் துபாய் காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.