UAE: தனியார் துறையில் பணிபுரியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்க புதிய சட்டம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (செப்டெம்பர் 25) முதல் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களின் ஊதியம் ஆண்களுக்கு நிகரானதாக இருக்க வேண்டும் என்ற ஒரு புதிய கூட்டாட்சி சட்டம் நடைமுறைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக ஜனாதிபதி, மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் 2020 ஆம் ஆண்டின் பெடரல் சட்டம் எண் 6 ன் முதல் ஆர்டிகிள் படி, பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரே பதவியில் இருந்தால் அல்லது அவர்கள் ஒரே மாதிரியான வேலையை செய்தால் அவர்களின் ஊதியமும் ஒரே அளவானதாக இருக்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறபட்டுள்ளது.
புதிய சட்டத்தின் மூலம் தொழிலாளர் உறவுகள் குறித்த 1980 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க கூட்டாட்சி சட்டத்தின் 32 வது பிரிவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களை மேம்படுத்தும் நோக்கில், அமல்படுத்தப்படவிருக்கும் இந்த புதிய சட்டமானது அமீரகத்தில் அதிகமான பெண் ஊழியர்கள் தனியார் துறையில் சேர ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில ஆண்டுகளாக பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது, இது அரசாங்கத்தின் மற்றும் பாலின இருப்பு கவுன்சிலின் முயற்சிகளால் வழிநடத்தப்படும் வருகிறது. மேலும், நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதிலும், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலும் அமீரகம் உலகில் முதலிடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.