மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சரை பிரம்மாண்ட முறையில் திறந்து வைத்த துபாய் ஆட்சியாளர்…!!
பூமியின் மிக அழகான கட்டிடம் என்று அழைக்கப்படும் துபாயின் மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் இன்று 22.2.2022 செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
மிக பிரம்மாண்டமான லைட்ஷோவுடன் இந்த அருங்காட்சியகத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்; துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூமுடன்; மற்றும் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் துபாயின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளனர்.
77 மீட்டர் உயரம் மற்றும் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில், தூண்கள் இல்லாமல் நீள்வட்ட வடிவ ஏழு மாடி கட்டிடமான இது கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முக்கிய தருணத்தை எட்டியுள்ளது.
ஷேக் சையத் சாலையில் ஒரு முக்கிய சின்னமாக மாறியிருக்கும் இந்த அருங்காட்சியகம் துபாயின் வியத்தகு கலைப் படைப்பிற்கு மற்றுமொரு சான்றாகும்.
துபாயின் துணிச்சலான கட்டிடக்கலை முயற்சிகளுக்கு மைல்கல்லாக இருக்கும் இந்த அருங்காட்சியகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை இது குறிக்கிறது.
துபாயின் இந்த அருங்காட்சியகத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் 2071 ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஆராயலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியகம் மக்களை தங்கள் சொந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்கேற்க ஊக்குவிக்கும் ஒரு செயல்திறன்மிக்க அணுகுமுறையில் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் போக்குகளை அனுபவிக்க மக்களை அழைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
30,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மியூசியம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான சோதனைக் களமாகவும், உலகின் முன்னணி விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் படைப்புகளை உருவாக்குவதற்கான தளமாகவும் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.