ஏர் பபுள் ஒப்பந்தத்தின் மூலம் அமீரகம் வந்த 200,000 இந்தியர்கள்..!!
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே ”ஏர் பபுள்” ஒப்பந்தம் போடப்பட்டதை தொடர்ந்து சுமார் 200,000 க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்திருப்பதாக அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், அமீரகம் மற்றும் இந்தியாவிற்கு இடையே போடப்பட்டிருக்கும் இந்த ஏர் பபுள் ஒப்பந்தமானது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் போடப்பட்ட ஏர் பபுள் ஒப்பந்தம் சீராக இயங்கியதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் தூதரகத்தில் பதிவு செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தூதரகமானது இந்திய மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்யும் இந்தியர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றது.
அதன்படி, வந்தே பாரத் திட்டம் தொடங்கியதில் இருந்து சுமார் 633,000 க்கும் அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூதரகம் தெரிவித்த புள்ளி விபரங்களின்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணிப்பதாகவும் அதே எண்ணிக்கையிலான பயணிகள் இந்தியாவில் இருந்தும் அமீரகத்திற்கு பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவன் கபூர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் இருந்து அமீரகத்திற்குள் பயணிகள் நுழைவது தொடர்பான சிக்கலானது பெருமளவு தீர்க்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் அமீரகத்திற்கு வந்துள்ளனர். மிக குறைவான எண்ணிக்கையில் பயணிகள் அமீரக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூறுகையில் நாட்டிற்குள் நுழைவது, விசா தேவைகள் மற்றும் தங்குவது ஆகியவை ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இருப்பினும், வேலை தேடி உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வேலை தேடி சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருவதற்கு பயணித்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் விசாவிற்கான தேவைகளை பூர்த்தி செய்யாததால் துபாய் சர்வதேச விமான நிலையத்திலேயே சிக்கி தவித்தனர். பின்னர் தூதரகம் இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்து விசா தேவைகளை பூர்த்தி செய்யாதவர்களை மீண்டும் இந்தியாவிற்கே அனுப்பி வைத்தது. இதனால் வேலை தேடி சுற்றுலா / விசா விசாக்களில் பயணிக்க வேண்டாம் என்று இந்தியர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சாதாரண விசா சேவைகள் மீண்டும் தொடங்கும் வரையிலும் மற்றும் job market-ல் வேலைக்காக ஆட்களை தேர்வு செய்ய ஆரம்பிக்கும் வரையிலும் அவர்கள் காத்திருப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட பயண நிலைமைகளை பூர்த்தி செய்யாத பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பயண நிலைமையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.