UAE: 90 நாட்கள் விசிட் விசாவை மீண்டும் அனைவருக்கும் வழங்க துவங்கிய துபாய்.. உறுதிப்படுத்திய பயண முகவர்கள்..!!
அமீரகத்தில் மூன்று மாதங்களுக்கான விசிட் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மட்டுமே இனி விசிட் விசாக்கள் வழங்கப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியும் இருந்தது. இந்த நிலையில் அமீரகத்திற்கு தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை விசிட்டில் அழைத்து வர விரும்பும் குடியிருப்பாளர்கள் இப்போது 3 மாத விசிட் விசாவைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாக்களானது துபாயில் வழங்கப்படுகின்றன என்று குடியிருப்பாளர்கள் மற்றும் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த விசாவிற்கு திரும்பப்பெறக்கூடிய வைப்புத் தொகையாக 1,000 திர்ஹம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2022 இல், மேம்பட்ட விசா அமைப்பின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவு விசாக்களில் பெரும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு சீர்திருத்தங்களில் ஒன்றாக இனி விசிட் விசாக்கள் 90 நாட்களுக்கு வழங்கப்படாது என்றும் இந்த விசாக்கள் 60 நாட்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையில் தற்பொழுது துபாய் மீண்டும் 90 நாட்களுக்கான விசா வழங்குவதாக தெரிய வந்துள்ளது.
இது பற்றி துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் PRO-வாகப் பணிபுரியும் ஒருவர் கூறுகையில் தனது நிறுவன ஊழியர்களுக்காக இந்த விசாக்களைப் பெற்றுத் தந்ததாகக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் “கடந்த மாதத்தில் எனது இரண்டு சக ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விசாவிற்கு விண்ணப்பித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் “நான் தபால் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கராமாவில் உள்ள AMER மையத்தை அணுகினேன். இதற்கான செயல்முறை எளிதானதாக இருந்தது. டெபாசிட் 1,000 திர்ஹம், மற்றும் டைப்பிங் கட்டணங்கள் மற்றும் சேவை கட்டணத்துடன் 770 திர்ஹம்கள் செலவாகும்” என்று கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, இந்த விசாவிற்கான சேவைக்கு ஆகும் மொத்த செலவு 1,770 திர்ஹம் ஆகும்.
அவரைப் போன்றே துபாயில் வசிக்கும் ஒருவர் தனது தாயை அமீரகத்திற்கு அழைத்து வருவதற்காக விசா விண்ணப்பிக்கும் சமயத்தில் ஆரம்பத்தில் ஒரு பயண நிறுவனம் மூலம் 60 நாள் விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டதாகவும் பின்னர் 90 நாள் விசாவைப் பற்றி கேள்விப்பட்டதைத் தொடர்ந்து ஒரு அமர் மையம் மூலம் இந்த விசாவிற்கு விண்ணப்பித்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் இது மிகவும் எளிதான செயல்முறையாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 90 நாள் விசிட் விசா நடைமுறை குறித்து நாட்டில் உள்ள பயண முகவர்கள் கூறுகையில், எங்களால் இந்த விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் தனிநபர்கள் மட்டுமே இந்த விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டிய தனிநபர்கள் அமர் டைப்பிங் சென்டர் மூலம் அல்லது GDRFA இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் GDRFA இணையதளத்தில், பயனர்கள் வணிகம் அல்லது வேலை வாய்ப்புகளுக்கான என்ட்ரி பெர்மிட், கிரீன் விசாக்களுக்காகக் காத்திருப்பவர்களுக்கான என்ட்ரி பெர்மிட், அத்துடன் நோயாளிகளின் துணை அனுமதி போன்றவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அதன் ஸ்மார்ட் சேவைகள் அமைப்பின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான புதுப்பிப்புகளின் புதிய தொகுப்பை செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 1, 2023 முதல் அதன் ஸ்மார்ட் சேவை அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட 15 சேவைகளின் பட்டியலை ICA ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.