UAE: ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு ஒரே ஃப்ளாட்டில் தங்கிய 49 இந்தியர்களுக்கு வேலை அளித்த அமீரக நிறுவனங்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வந்து ஒரே அபார்ட்மென்டில் 64 பேர் தங்கி வந்த துயர சம்பவமானது கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஊடகங்களால் வெளியிடப்பட்டிருந்தது.
UAE: ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு ஒரே ஃப்ளாட்டில் 64 இந்தியர்கள் தங்கிய அவலம்..!!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விசிட் விசாக்களில் வந்த ஆண்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏஜெண்ட் குழுவினரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ப்ளூ காலர் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்ட பின்னர் ரூ.150,000 (7,500 திர்ஹம்) ஏஜெண்ட்களுக்கு செலுத்தியதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் அனைவரையும் ஏஜெண்ட்கள் ஏமாற்றியுள்ளதாகவும் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
இந்த செய்தியினை அறிந்தவுடன் பல நிறுவனங்கள் முன்வந்து தொழிலாளர்களுக்கு ஆதரவளித்துள்ளன. அதனை தொடர்ந்து அவர்களில் 49 பேருக்கு 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. மற்றவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இவர்களுக்கு உதவி புரிந்த இரண்டு சமூக சேவையாளர்களான ஷிராலி ஷேக் முசாஃபர் மற்றும் ஹிதாயத் அடூர் ஆகியோருடன் கர்நாடக NRI தலைவரும், தொழிலதிபருமான பிரவீன் குமார் ஷெட்டிக்கு சொந்தமான பார்ச்சூன் பிளாசா ஹோட்டலில் வேலையற்றோருக்கான நேர்காணல்கள் நடைபெற்றன.
“இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லியைச் சேர்ந்த திறமையான கார்பென்டர்கள் மற்றும் ஏசி டெக்னீசியன்கள்” என்று முசாஃபர் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்த செய்தியினை ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர், அத்தகைய திறமையான தொழிலாளர்கள் தேவைகள் கொண்ட பல நிறுவனங்கள் இவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி கொண்டு மற்றும் நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றவாறு திறமையான தொழிலாளர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல்களை நடத்தியது.
“பெரும்பாலான தொழிலாளர்கள் கார்பென்டர்கள், இன்ஸ்டாலர் மற்றும் உதவியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அவர்களின் விசா இப்போது செயல்பாட்டில் உள்ளது” என்று முசாஃபர் கூறியுள்ளார்.
“அவர்களுக்கு சுத்தமான மற்றும் வசதியான தங்குமிடங்களும், உணவும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக சேவகர் அடூர் குறிப்பிடுகையில், “ஊடகங்களில் வெளிவந்த இந்த செய்தியானது, ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்டு இதேபோன்ற துயர சூழ்நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான பிற தொழிலாளர்களுக்கு நம்பிக்கையின் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இந்த 64 தொழிலாளர்களைத் தவிர, வேலைகள் தேடும் ப்ளூ காலர் மற்றும் வொய்ட் காலர் தொழிலாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 80 CV.க்களை நாங்கள் இதுவரை பெற்றுள்ளோம். துன்பகரமான தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்த 23 நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவு வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முனைகின்றன என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறியுள்ளார்.
வேலையைப் பெற்ற தொழிலாளர்களில் ஒருவரான முகமது மொயினுதீன், கலீஜ் டைம்ஸ் மற்றும் சமூக சேவையாளர்களான முசாஃபர் மற்றும் அடூர் ஆகியோருக்கு வேலை கிடைக்க உதவியதற்கு அவரும் அவரைப் போன்ற பலரும் கடன்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், “இந்த சமூக சேவையாளர்கள் எங்களை அணுகி, இந்த சிக்கலில் இருந்து எங்களை காப்பாற்றும் வரை நாங்கள் மிகவும் உதவியற்றவர்களாகவும் அனைத்தையும் இழந்தவர்களாக உணர்ந்தோம். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் மனிதநேயம் மீதான எங்கள் நம்பிக்கையை புதுப்பித்துள்ளது, எங்களைப் போன்ற ஏழை மக்களைப் பராமரிக்கும் மக்கள் இன்னும் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா திரும்ப விரும்பிய மற்றொரு தொழிலாளி சந்தீப் சர்மா, சமூக சேவையாளர்கள் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் உதவியால் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அவர் கூறுகையில், “இந்தியாவில் எனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்ததில் நான் மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்தீப் சமூக சேவையாளர்களுடன் இணைந்து டிக்கெட் ஏற்பாடு செய்ததற்காக இந்திய தூதரகத்திற்கு நன்றி கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “எனது சொந்த நாட்டுக்குத் திரும்ப எனக்கு உதவியதற்காக ஐக்கிய அரபு அமீரக மக்களும் அதிகாரிகளும் காட்டிய இரக்கத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.