குவைத்: வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பதிலாக நாட்டு மக்களையே பணியமர்த்தும் திட்டம்…!! ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என தகவல்…
குவைத்தில் அரசாங்க வேலைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதிலாக குவைத் நாட்டு குடிமக்களை மாற்றுவதற்கான திட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்று குவைத்தின் செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வேலைவாய்ப்பு நிறுவனமான சிவில் சர்வீஸ் கமிஷனால் எடுக்கப்பட்ட இது தொடர்பான முடிவு, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சேவை வேலைகள் தவிர மற்ற அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2017 இல், குவைத் அல்லாத வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, குடிமக்களின் வேலைவாய்ப்பை அல்லது “குவைதிசேஷன்” என அழைக்கப்படும் திட்டத்தை ஐந்தாண்டுகளில் முடிக்க ஆணையம் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 4.6 மில்லியனில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் வெளிநாட்டினர் ஆகும். சமீபத்திய மாதங்களில், கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தக் கோரி குவைத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து குவைத் சமீபத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் மீதான சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது, பின்னர் தங்கள் நிலையை மாற்றியமைக்க அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டது.
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் 18,000 வெளிநாட்டவர்கள் குவைத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.