இந்தியா-அமீரகம் பயணத்தடை: முன்பதிவை மீண்டும் துவங்கிய விமான நிறுவனங்கள்..!! பயணிகளிடையே நிலவும் குழப்பம்..!! அதிகாரிகள் சொல்வது என்ன..??
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் வேளையில், சில விமான நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமான முன்பதிவைத் தொடங்கியுள்ளன.
விமான நிறுவனங்களின் வலைத்தளங்களின்படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து ஜூலை 15 முதல் துபாய்க்கு மீண்டும் விமான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகளுக்கான தடையை காலவரையின்றி நிறுத்தி வைப்பது குறித்த அதன் அறிவிப்பைத் தொடர்கிறது.
தற்பொழுது எமிரேட்ஸ் விமானத்திற்கான எகனாமிக் கிளாஸ் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. ஜூலை 16 ஆம் தேதிக்கான எமிரேட்ஸ் பிசினஸ் மற்றும் முதல் வகுப்புக்கான டிக்கெட் விலை முறையே 7,500 (ரூ .148,900) மற்றும் 8,147 திர்ஹம் (ரூ .165,353) ஆகும்.
ஃப்ளைதுபாய்க்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 27 ஆம் தேதி திறக்கப்படும்.இந்த விமானத்தில் ஒரு எகனாமிக் கிளாஸ் டிக்கெட்டின் விலை 1,645 திர்ஹம் (ரூ .33,892) ஆகும்.
விஸ்டாரா ஏர்லைன்ஸ் வலைத்தளம் மும்பை-துபாய் டிக்கெட் விலையை 895 திர்ஹம்ஸ் என நிர்ணயித்துள்ளது. அதிலும், ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்தியாவின் சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
இண்டிகோ ஏர்லைன்ஸ் தங்கள் இணையதளத்தில் மும்பையிலிருந்து அமீரகத்திற்கு பயணிப்பதற்கான கட்டணங்களை நிர்ணயித்து விமான முன்பதிவை திறந்துள்ளது. அதன்படி ஜூலை 16 அன்று நேரடி விமானத்திற்கு 850 திர்ஹமும் கனெக்டிங் விமானத்திற்கு 1100 திர்ஹமும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மற்றுமொரு இந்திய கேரியர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் தங்கள் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவுகளை திறந்துள்ளது. கோழிக்கோடு முதல் துபாய் பயணிப்பதற்கான டிக்கெட் விலை ஜூலை 16 அன்று 1,960 திர்ஹமில் தொடங்குகிறது. ஜூலை 17 ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட்டில் மங்களூரில் இருந்து துபாய் பயணிக்க 2,092 திர்ஹம் ஆகும்.
இந்த செய்தி அறிவிக்கப்பட்டதிலிருந்து வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளதாகவும் பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
“இங்கே சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களிடையே நிறைய குழப்பங்கள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியதும், இன்னும் சில விமானங்கள் இந்த சேவையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்” என்று அவர்களில் சிலர் கூறுகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்க ஏப்ரல் 24 அன்று தடை விதிக்கப்பட்டது. அப்போதிருந்து, விமானங்களின் இடைநீக்கத்தை அகற்றுவதற்கான முடிவு பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அத்துடன் வரும் ஜூலை 15 ஆம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளிடையே நிலவும் குழப்பம்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்கள் இந்த செய்தி குறித்து குழப்பமடைந்துள்ளனர்.
இந்த இடைநீக்க தேதியானது கடந்த காலங்களில் பல முறை நீட்டிக்கப்பட்டதாகவும், இப்போது அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகளிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நாடுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
“இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மேம்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று சிலர் கூறுகின்றனர்.
மேலும் சிலர் இந்த விமானத்தடை பல முறை மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்த்து பின்னர் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிற காரணத்தால் இந்த செய்தியை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறோம் என தெரிவிக்கின்றனர்.
ஷார்ஜாவைச் சேர்ந்த ஷாபாஸ் அலி என்ற தொழில்முனைவோர் ஏப்ரல் முதல் இந்தியாவில் சிக்கித் தவிக்கிறார். அவர் பல முக்கிய வேலைகளைக் கொண்டுள்ளதால் விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் திரும்ப விரும்புகிறார். இருப்பினும் டிக்கெட் முன்பதிவு செய்வதில் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைக் காணும்போது மட்டுமே எனது டிக்கெட்டை முன்பதிவு செய்வேன்,” என்று கூறியுள்ளார்.
சில பயண முகவர்கள் நிலைமையைப் பயன்படுத்தி, விமானங்கள் மீண்டும் தொடங்குவது பற்றிய தவறான செய்திகளை அவர்களுக்கு அளித்து வருவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
விமான நிறுவனங்கள் முன்பதிவைத் துவங்கியிருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பயணத்தடை நீக்கம் தொடர்பான எந்த புதிய அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.