ஓமான்: தேசிய தினத்தை முன்னிட்டு நிகழ்த்தப்படவிருக்கும் வான வேடிக்கைகளை நீங்கள் எங்கு சென்று காணலாம்..??
ஓமான் வரலாற்றின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றான ஓமான் தேசிய தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கும் வேளையில், தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட விருக்கின்றது. ஓமானின் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் பொதுமக்கள் இந்த வானவேடிக்கைகளை கண்டு களிக்கலாம்.
மேலும், தேசிய கொண்டாட்டங்களுக்கான பொதுச் செயலகமானது, கொரோனாவிற்கான உச்சக் குழுவின் ஒருங்கிணைப்புடன், தேசிய தினத்தை முன்னிட்டு நிகழ்த்தப்படும் வான வேடிக்கைகளை பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்குள் இருந்தே கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை (நவம்பர் 18) இரவு 8 மணிக்கு அரை மணி நேர வான வேடிக்கை நிகழ்வானது, விலாயத் அல் அமரத் (Wilayat Al Amerat) மற்றும் மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள விலாயத் அல் சீப் (Wilayat Al Seeb) ஆகியவற்றில் நடைபெறும். தோஃபர் கவர்னரேட்டில் உள்ள நகராட்சியின் பொழுதுபோக்கு மையத்திலும் இரவு 8 மணிக்கு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு, முசந்தம் கவர்னரேட்டில் உள்ள விலாயத் கசாப் பகுதி (Wilayat Khasab) மற்றும் விலாயத் புரைமி (Wilayat Buraimi) ஆகிய இடங்களிலும் அரை மணி நேர வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.