அபுதாபி: இந்தியா செல்ல அக்டோபர் மாதம் வரைக்கான விமான டிக்கெட் முன்பதிவு துவக்கம்..!!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது மார்ச் 28 முதல் அக்டோபர் 29 வரை இந்தியா செல்லும் விமானங்களுக்கான முன்பதிவுகளைத் திறந்துள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அறிவித்துள்ள இந்த விமான முன்பதிவில் அபுதாபியிலிருந்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்குச் செல்லும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் பொது விற்பனை முகவர் அரேபிய டிராவல் ஏஜென்சி தெரிவித்துள்ளது. அபுதாபியில் இருந்து திருச்சிக்கு வாரத்திற்கு ஒரு முறை புதன்கிழமை மட்டும் விமான சேவை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மார்ச் 1 முதல் 28 வரை இயங்கும் வந்தே பாரத் திட்டத்தின் 10 ம் கட்டத்தில் திருப்பி அனுப்பும் விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை அதிகரித்த வண்ணமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விமானங்களில் பயணிப்பவர்கள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களுக்கு போர்டிங் மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, PCR சோதனையானது குழந்தைகளுக்கும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதற்கு பிறகு தற்பொழுது வரை உலகெங்கிலும் இருந்து 6.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் 10 ம் கட்டம் மார்ச் 28 அன்று முடிவடையவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.