கொரோனாவிற்கு எதிராக மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த அஜ்மான் அரசு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமீரகம் முழுவதும் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்பொழுது அஜ்மானில் கொரோனாவிற்கெதிரான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அஜ்மான் அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவை நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண நிகழ்வுகளில் அதிகபட்சம் 10 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 துக்கம் அனுசரிக்கப்படுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சினிமா, உடற்பயிற்சி மையங்கள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் ஹோட்டல் கடற்கரைகளும் 50 சதவீத எண்ணிக்கையிலேயே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் நள்ளிரவுக்குள் மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதியினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.