பயணத் தடை நீக்கப்பட்டாலும் செல்லுபடியாகும் ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களுக்கே நாட்டிற்குள் நுழைய அனுமதி..!! குவைத் அரசு தகவல்..!!
குவைத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கி ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டவர்கள் குவைத் திரும்பலாம் என ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer/BioNTech), மாடர்னா (Moderna) அல்லது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் அல்லது ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson & Johnson) தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்ற வெளிநாட்டவர்களே நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செல்லுபடியாகும் ரெசிடென்ஸி விசா வைத்திருந்து தடுப்பூசியின் இரண்டு டோஸினைப் போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே குவைத் வர அனுமதி வழங்கப்படும் என்றும் வருகை விசா (arrival visa) மற்றும் காலாவதியான ரெசிடென்ஸி விசா உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குவைத் அரசு வெளிநாட்டவர்கள் விசிட்டில் குவைத் வருவதற்கான விசாக்களை இன்னும் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, 4 இலட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளில் சிக்கித்தவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்களில் குறைவான நபர்களே குவைத் அரசு அங்கீகரித்துள்ள தடுப்பூசியின் இரண்டு டோஸினையும் போட்டுக்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.