பிளாஸ்டிக்கை ஒழிக்கும் ‘துபாய் கேன்’ திட்டம்…!! 117,000 லிட்டர் தண்ணீரை இலவசமாக பயன்படுத்திய குடியிருப்பாளர்கள்…!!
பொது மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘துபாய் கேன்’ முயற்சியானது 234,000க்கும் அதிகமான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு (500மிலி) சமமான அளவைக் குறைக்க உதவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15 அன்று துபாய் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் துபாய் கேன் திட்டத்தின் மூலம் இலவசமாக 117,000 லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி பிரபலமான இடங்கள் மற்றும் பொது பூங்காக்களில் ஐந்து புதிய நீர் நிரப்பும் இடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நகரம் முழுவதும் செயல்பட்டு வரும் துபாய் கேன் இருக்கும் இடங்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஜுமேரா 2, சன்செட் பீச், JBR, அல் சஃபா பார்க் மற்றும் முஷ்ரிஃப் தேசிய பூங்கா போன்ற இடங்களில் துபாய் கேன் நிறுவப்பட்டுள்ளன. துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டை பெரிதும் குறைக்க ஊக்குவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது சமூகங்கள், வணிகங்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை மீண்டும் நிரப்பக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பொது நீர் நிலையங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வாட்டர் ஃபில்டர்களை நிறுவுதல் போன்ற எளிய மாற்றங்களை மேற்கொள்ள தூண்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) சுற்றுலா மேம்பாடு மற்றும் முதலீடுகளின் நிர்வாக இயக்குநர் யூசுப் லூட்டா கூறுகையில் வரும் டிசம்பர் 2022க்குள் நகரம் முழுவதும் 50 இடங்களில் துபாய் கேன்களை நிறுவுவதற்கான நோக்கில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.