சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பின்னணி என்ன..??
சென்னையில் இருந்து துபாய்க்கு சனிக்கிழமை (இன்று) காலை செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இதனை ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த மிரட்டல் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி கூறுகையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு அழைப்பு வந்ததையடுத்து போலீசார் அது குறித்த விசாரணைக்கு முடுக்கிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியும் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை எனவும் அந்த மிரட்டல் புரளி எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மிரட்டலை விடுத்த நபர் ரஞ்சித் என்றும் தனது தங்கை அந்த விமானத்தில் பயணிப்பதை தடுப்பதற்காக மேற்கொண்ட செயல் எனவும் தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விமானத்தில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட சுமார் 170 பேர் பயணிக்கவிருந்ததாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானமானது சில மணி நேரங்கள் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகளுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
திடீரென சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது அங்கிருந்த பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.