ஓமான்: கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுபவர்களின் பெயர், புகைப்படம் ஊடகங்களில் வெளியிடப்படும்..!!
கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசு அறிவித்திருக்கும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், குறிப்பாக இளைஞர்களுக்கும் மேலும் அனைத்து குடும்ப மற்றும் சமூகக் கூட்டங்களையும் நிறுத்த வேண்டும் என்றும் ஓமான் நாட்டின் கோவிட் -19 க்கான சுப்ரீம் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கொரோனா தடுப்பு அதிகாரிகள் எடுப்பார்கள் எனவும், நெறிமுறைகளை மீறுபவர்களின் சுயவிவரங்களை அறிவித்து அவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் பல்வேறு ஊடகங்களில் பின்னர் வெளியிடுவார்கள் என்றும் சுப்ரீம் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அனைத்து வயதினரிடையேயும் அதிகரித்து வருவதாக வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கமிட்டியின் உத்தரவை மீறி இரண்டு வெவ்வேறு பொது இடங்களில் ஒன்று கூடிய ஓமான் நாட்டு குடிமக்களை வடக்கு ஷர்கியா காவல்துறையும், அதேபோன்று வேறொரு இடத்தில் மக்கள் ஒன்று கூடிய ஒரு கூட்டதையும் தக்லியா கவர்னரேட் காவல்துறை, நிஸ்வா சிறப்பு மிஷன் காவல்துறையின் ஆதரவுடன் தடுத்து நிறுத்தியது. மேலும் பொது இடத்தில் ஒன்றுகூடிய ஆசிய நாடுகளை சார்ந்த குடியிருப்பாளர்களையும் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.