அபுதாபி: ஒரு மாதத்திற்கு மூடப்படும் பாலம்.. மாற்று வழியை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை..
வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி எமிரேட்டின் பொது போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அபுதாபியை அல் மரியா ஐலேண்டுடன் இணைக்கின்ற நான்கு பாலங்களில் ஒன்று நாளை முதல் வாகன போக்குவரத்துக்கு மூடப்படும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இது பற்றிய முழுவிவரங்களை ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது.
பகிரப்பட்டுள்ள விவரங்களின்படி, ஜனவரி 11 (நாளை) நள்ளிரவு முதல் சயீத் தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் (அ) எலக்ட்ரா ஸ்ட்ரீட்டில் இருந்து அல் மரியா ஐலேண்டுக்குச் செல்லும் பாலமானது மூடப்படுவது தெரியவந்துள்ளது. அல் ஜாஹியா பகுதியை அல் மரியா ஐலேண்டுடன் நேரடியாக இணைக்க புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
எனவே, பாலம் மூடப்படும் காலத்தில் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைத் தேர்வு செய்து கொள்ளுமாறு ITC அறிவுறுத்தியுள்ளது. தற்போது, பணிகளுக்காக மூடப்படும் பாலமானது பிப்ரவரி 1ஆம் தேதியன்று அதிகாலை 5 மணியளவில் அல் ஜாஹியாவை மரியா ஐலேண்டுடன் நேரடியாக இணைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகவே, வாகன ஓட்டிகள் மற்ற மூன்று பாலங்கள் வழியாக அபுதாபியில் இருந்து அல் மரியா ஐலேண்டுக்கு நேரடியாக பயணிக்க இயலும். மேலும், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை அத்துமீறாமல் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ITC குறிப்பிட்டுள்ளது.