UAE: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமா?? பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு இரு வகையான கொரோனா தடுப்பூசிகள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளன. சீன நிறுவனத்தின் சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும் கிடைக்கிறது,
அதே நேரத்தில் துபாயில் ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech vaccine) தடுப்பூசிகள் குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அமீரகத்தில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டாலும் பொது மக்களிடையே பல்வேறு விதமான சந்தேகங்களும் கேள்விகளும் நிலவி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
அமைச்சகம் விளக்கமளித்திற்கும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்கி கொரோனா வைரஸ்சிற்கு எதிராக உங்களை பாதுகாக்க உதவும். தடுப்பூசி போடுவது உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கோவிட் -19 இலிருந்து பாதுகாக்க உதவும்.
தடுப்பூசி எடுத்த பிறகும் கோவிட் -19 தொற்று ஏற்படுமா?
இல்லை, தற்போது கிடைக்கக்கூடிய ஆய்வுகளின்படி நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, தடுப்பூசியின் முதல் டோஸிற்கு பிறகு 21 – 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசிக்கான இரண்டு டோஸ்களையும் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசியினால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?
தடுப்பூசி செலுத்தப்பட்ட உடலின் பகுதியில் வலி, காய்ச்சல், தலைவலி, சோர்வு, தசை வலி மற்றும் சோம்பல் போன்ற சில பொதுவான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பொதுவாக, லேசான அறிகுறிகள் சிகிச்சையின்றி குறையும்.
ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்குச் செல்லலாம் அல்லது சுகாதார அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தடுப்பூசியை யார் போட்டுக்கொள்ளக் கூடாது?
- கடுமையான அலர்ஜி கொண்டவர்கள்
- கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்.
- கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள்.
- கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள்.
தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டுமா?
தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர் அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.
எந்த வயதிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்?
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளலாம்.