7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்த ஓமான்!! – கள ஆய்வுகளை தீவிரப்படுத்திய தொழிலாளர் அமைச்சகம்..!!

ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் இந்த ஆண்டு தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகத்தின் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தொழிலாளர் அமைச்சகத்தின் உதவி இயக்குநர் ஜெனரல் நாசர் பின் சலேம் அல் ஹத்ராமி அவர்கள் பேசுகையில், ஓமானில் உள்ள அனைத்து தொழிலாளர் நலத் துறைகளிலும் பணிச்சூழலை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒழுக்கமானதாக மாற்ற அமைச்சகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்தாண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, நகராட்சிகள், கல்வி அமைச்சகம் மற்றும் ராயல் ஓமன் காவல்துறையின் கூட்டு ஆய்வு பிரச்சாரங்களில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், வேலை நேரம், பெண்கள் மற்றும் சிறார்களின் வேலைவாய்ப்பு, தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்தையும் ஆய்வுக் குழு கருத்தில் கொண்டு, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அல் ஹத்ராமி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, எந்தவொரு பணியிடத்திலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நுழைவதற்கு ஆய்வுக் குழுவிற்கு உரிமை உண்டு என்றும், தொழிலாளர் சட்டத்தின் 9 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான அனைத்து தரவையும் முதலாளிகள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.
அத்துடன் வேலை வழங்குபவர் அல்லது அவரது பிரதிநிதியால் வேலை தடுக்கப்பட்டால், தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 112 இன் படி, OMR500 க்கு மிகாமல் அபராதம் அல்லது ஒரு மாதத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஒன்றுடன் முதலாளி தண்டிக்கப்படுவார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தொழிலாளர் சந்தையில் எதிர்மறையான நிகழ்வை அகற்ற அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த 2022 ம் ஆண்டில் 12,045 சோதனைகளை அமைச்சகம் நடத்தியுள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய அல் ஹத்ராமி, 2022 இல் 17,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 27,954 பேர் பணியிடத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அதேநேரத்தில், தொழிலாளர் புகார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 66,469 ஐ எட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.