அமீரக செய்திகள்

13-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய சிறுவனை காப்பாற்றிய வாட்ச்மேன் மற்றும் குடியிருப்பாளர்.. கவுரவித்த காவல்துறை..!!

ஷார்ஜாவில் உள்ள கட்டிடத்தின் 13 வது மாடியின் ஜன்னலில் தொங்கிய ஐந்து வயது சிறுவனை காப்பாற்ற உதவிய காவலாளி மற்றும் குடியிருப்பாளர் ஆகிய இருவரும் ஷார்ஜா காவல்துறையால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஷார்ஜா காவல்துறைத் தலைவர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் முஹம்மது ரஹ்மத்துல்லா மற்றும் குடியிருப்பாளரான ஆதில் அப்துல் ஹபீஸ் ஆகியோரை கௌரவித்தனர்.

ஷார்ஜாவின் அல் தாவுன் பகுதியில் இருக்கக்கூடிய கட்டிடத்தின் 13 வது மாடியில், குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஜன்னலின் வெளியே சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அதெல் அப்துல் ஹபீஸ் என்பவர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, பிளாட்டிற்கு வெளியே ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அந்த கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு. 13வது மாடிக்கு உடனடியாக சென்று ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த அந்த குழந்தையை இருவரும் காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அப்துல் ஹபீஸ் கூறும்போது: “ஜன்னலில் தொங்கி கொண்டிருந்த குழந்தை இருக்கும் பிளாட்டிற்கு சென்று கதவை தட்டியதாகவும், ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பின்னர் உடனடியாக அந்த குழந்தையின் தந்தைக்கு கால் செய்து, சம்பவத்தை எடுத்து கூறி, கதவை உடைத்து உள்ளே நுழைந்து குழந்தையை காப்பாற்ற அனுமதி கேட்டதாக கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது, அந்த குழந்தை ஜன்னலின் ஓரத்தை மிகவும் சிரமத்துடன் பிடித்து கொண்டு, கால் விரல் நுனியில் நின்று கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். உடனே அந்த குழந்தையின் கைகளைப் பிடித்து, வாட்ச்மன் உதவியுடன் பத்திரமாக மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அந்த கட்டிடத்தின் வாட்ச்மன் கூறுகையில், குழந்தை ஜன்னலில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குழந்தை விழுந்தால் அக்குழந்தையை காப்பாற்ற போர்வை மற்றும் மெத்தையுடன் கீழே தயாராக இருக்கும்படி அக்கம்பக்கத்தினரிடம் கூறியதாகவும், பின்னர் 13 வது மாடிக்கு சென்று கதவை உடைத்து குழந்தையை காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து வியாழன் அன்று நடைபெற்ற விழாவின் போது, ​​ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி, மேஜர்-ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி, இரு குடியிருப்பாளர்களின் மன உறுதி மற்றும் வீரச் செயலுக்காக அவர்களை கௌரவித்துள்ளார். இந்த மரியாதைக்கு அந்த இருவரும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!