அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 22 மில்லியன் திர்ஹம்ஸை வென்ற இந்திய பெண்மணி…!!
அபுதாபியில் ஒரு சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிக் டிக்கெட் வாராந்திர ரேஃபிள் டிராவில் தற்போது குவைத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பெண்மணி 250,000 திர்ஹம்ஸை்வென்றிருந்த நிலையில், பிப்ரவரி 3 ம் தேதி நடந்த மாதாந்திர டிராவிலும் இந்தியப் பெண்மணி ஒருவர் 22 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார்.
கேரளாவில் உள்ள திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 14 நண்பர்களுடன் வாங்கிய டிக்கெட்டிற்கு 22 மில்லியன் திர்ஹம்ஸ் கிடைத்துள்ளது. பிக் டிக்கெட் தொகுப்பாளர் ரிச்சர்டிடமிருந்து வெற்றி பெற்றதாக அழைப்பு வந்தபோது அதை நம்ப முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ஜனவரி 27 அன்று டிக்கெட்டை வாங்கிய என்னை என் நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என்று நினைத்தேன் என கூறியுள்ளார்.
மேலும் “வெற்றி பெற்ற பரிசுத் தொகை நண்பர்கள் குழு அனைவருக்கும் பகிரப்படும். பிக் டிக்கெட்டில் வெற்றி பெற்றதற்கு என்னை விட எனது நண்பர்கள் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்,”.
“என் பெயரில் டிக்கெட் வாங்கப்படுவது இதுவே முதல் முறை. அதனால், எங்கள் குழுவில் நான் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெல்லும் தொகையை என்ன செய்வது என்று ஜலாலும் அவருடைய நண்பர்களும் இன்னும் திட்டமிடவில்லை, ஆனால் அவர்கள் அதில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.