UAE: விசா காலாவதியான பிறகு நாட்டில் தங்குவதற்கான தினசரி அபராதத்தை ஒருங்கிணைத்த அரசாங்கம்..!!
அமீரகத்தின் டிஜிட்டல் அரசாங்கம், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியுடன் இணைந்து, அமீரக குடியிருப்பு விசாக்கள், சுற்றுலா மற்றும் விசிட் விசாக்கள் காலாவதியான பிறகு விதிக்கப்படும் அபராதங்களை ஒருங்கிணைத்துள்ளது. அதன்படி சலுகைக் காலத்திற்குப் பிறகும் நாட்டில் அதிக காலம் தங்குவதற்கான தினசரி அபராதம் அனைத்து விசாக்களுக்கும் ஒருங்கிணைக்கப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, விசா மற்றும் அதன் புதுப்பித்தலுக்கு வழங்கப்பட்ட எந்த சலுகைக் காலமும் முடிந்த பிறகு, கூடுதல் நாட்கள் தங்கினால் ஒவ்வொரு நாளுக்கும் 50 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே, நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆணையத்தின் இணையதளம் மற்றும் துபாயின் வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) இணையதளத்தைப் பார்வையிடுமாறு டிஜிட்டல் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த தளத்தில் விசாக்களை வழங்குதல், நீட்டித்தல் அல்லது ரத்து செய்தல் போன்ற விசா சேவை தொடர்பான கட்டணங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலும், விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கவும், ஒழுங்குபடுத்தவும் அமீரகத்தின் டிஜிட்டல் அரசாங்கம் விசா விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் சேனல்களை அர்ப்பணித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் நுழைவு மற்றும் விசா அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம், அதன் ஸ்மார்ட் அப்ளிகேஷன், ‘Dubai Now’ ஆப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மொபைலில் விண்ணப்பிக்க ஆணையத்தின் இணையதளம், ஸ்மார்ட் அப்ளிகேஷன் மற்றும் நேரடியாக விண்ணப்பிக்க ஆணையத்திடம் பதிவுசெய்யப்பட்ட டைப்பிங் சென்டர் அல்லது GDRFAஆல் அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர்கள் என டிஜிட்டல் அரசாங்கம் வெவ்வேறு ஏற்பாடுகளை உறுதி செய்துள்ளது.
பெரும்பாலும், இந்த மையங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஒப்புதல் அளித்தவுடன், விண்ணப்பதாரர் அசல் என்ட்ரி பெர்மிட்டுடன் ஒப்புதல் கடிதத்தைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.