அமீரகத்தில் விபத்து நிகழ்ந்த இடங்களில் இந்த தவறை செய்தால் கடுமையான நடவடிக்கை..!! எச்சரிக்கும் காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் விபத்து நடந்த இடங்களில் சுற்றி கூட்டமாக நிற்பது சட்டவிரோதமான செயல் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த சட்ட விரோதமான செயலில் ஈடுபடுபவர் மீது 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பார்வையாளர்கள் விபத்து நடந்த இடங்களில் சூழ்ந்து கொள்வது காவல்துறை, சிவில் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு அதிகாரிகளின் பணிகளைத் தாமதப்படுத்துவதாக கூறப்படுகின்றது.
மேலும் விபத்து நடந்த இடங்களை போட்டோ மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, சாலை விபத்துக்களை பதிவு செய்து, அதனை படங்கள் மற்றும் கிளிப்களாக சமூக ஊடகங்களில் வெளியிட்டால் 150,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
“இவ்வாறான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் இது போன்ற படங்களை பார்க்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு உள அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என்று அமைச்சகம் முன்பு ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.