துபாயை விட்டு பயணிப்பவர்களின் வீட்டிற்கு இலவச பாதுகாப்பு..!! துபாய் போலீஸின் அசத்தல் சேவை..!!
நீங்கள் துபாயில் வசிக்கும் அமீரக குடியிருப்பாளரா? உங்கள் விடுமுறையை அனுபவிக்க அல்லது பிற காரணங்களுக்காக நாட்டிற்கு உள்ளே அல்லது வெளியில் பயணம் செய்கிறீர்கள் என்றால், கொள்ளையர்களிடமிருந்து உங்கள் வீட்டை பாதுகாப்பது இனி மிகவும் எளிது.
ஏனெனில், பொதுவாக வீட்டின் பாதுகாப்பிற்கு சிசிடிவி அல்லது மோஷன் சென்சார் கேமராக்களை நிறுவுதல், கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பாதுகாப்பாகப் பூட்டுதல் மற்றும் விளக்குகளை எரிய வைப்பது போன்றவைதான் நம்மில் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைகளாக இருக்கலாம்.
ஆனால், இவற்றைத் தவிர உங்கள் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நினைத்தால் நீங்கள் துபாய் காவல்துறையின் உதவியையும் நாடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் ஹோம் செக்யூரிட்டி (smart home security) என்கிற செயலியில் முன்பதிவு செய்வதன் மூலம், உங்கள் வீட்டிற்கு இலவச போலீஸ் பாதுகாப்பு சேவையைப் பெறலாம்.
இந்தச் சேவை வில்லா குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைக் கண்காணிக்க, அதன் சுற்றுப்புறங்களில் காவல் பணியில் இருக்கும் ரோந்து வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. எனவே குடியிருப்பாளர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக விமான நிலையத்தில் இருந்தும் கூட இந்த சேவைக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக, துபாய்க்கு வெளியே இருக்கும்போது கூட ஸ்மார்ட் ஹோம் செக்யூரிட்டி செயலியில் பதிவு செய்யலாம். முதலில் துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் ஹோம் செக்யூரிட்டி பயன்பாட்டைப் பதிவிறக்கி, ஹோம் செக்யூரிட்டி சேவையில் பதிவு செய்து, உங்கள் வீட்டின் இருப்பிடம் மற்றும் பயண நேரம் போன்ற விவரங்களை அதில் உள்ளிட வேண்டும்.
அதையடுத்து, துபாய் காவல்துறையினர் நீங்கள் வெளியில் இருக்கும் போது உங்கள் வீட்டை கண்காணிக்க ரோந்து வாகனங்களை அனுப்புவார்கள். எவ்வாறாயினும், இந்த இலவச சேவையைப் பெறுவதற்கு நீங்கள் துபாய் காவல்துறையின் சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்:
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- உங்கள் குடியிருப்பு துபாயில் இருக்க வேண்டும்
- குடியிருப்பு வீடாக இருக்க வேண்டும் (வில்லா) அபார்ட்மெண்ட் அல்ல
- அனைத்து ஜன்னல்கள் மற்றும் நுழைவாயில்கள் பூட்டப்பட வேண்டும்
- விலையுயர்ந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அலமாரிகள் மற்றும் பெட்டகங்கள் சீல் வைக்கப்படக் கூடாது.
- பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை வங்கிகளில் பாதுகாப்பான பெட்டிகளில் டெபாசிட் செய்ய வேண்டும்
- திருட்டைத் தவிர்க்க, கார் சாவிகள் அல்லது எந்தப் போக்குவரத்தின் சாவிகளும் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் இருக்கக் கூடாது
இந்த சேவையைக் கோரும்போது பின்வரும் விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்:
தேவையான தகவல்
- விண்ணப்பதாரரின் எமிரேட்ஸ் ஐடி எண்
- செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி
- அலைபேசி எண்
- மகானி எண்
- வில்லா எண்
- பயண விவரங்கள் (புறப்படும் மற்றும் வந்தடையும் தேதிகள்)
- அவசரகாலத்தில் தகவல் தொடர்பு விவரங்கள் (பெயர், மொபைல் எண்)
சேவையைப் பெறுவது எப்படி?
- விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
- தேவையான தகவல்களை இணைக்கவும்
- கோரிக்கையை சமர்ப்பிக்கவும்
- கோரிக்கையின் பேரில் பின்தொடர்வதற்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் பரிவர்த்தனை எண்ணைப் பெறவும்
சேவை வழங்கும் சேனல்கள்
- துபாய் போலீஸ் ஆப்
- துபாய் போலீஸ் இணையதளம் http://www.dubaipolice.gov.ae
- ஸ்மார்ட் காவல் நிலையங்கள் (SPS)
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel