ஐரோப்பாவின் ‘ஷெங்கன் விசா’ போன்று GCC நாடுகளை சுற்றிப்பார்க்க ஒரே விசா.. சுற்றுலாவை அதிகரிக்க புதிய முயற்சி..!!
வெளிநாடுகளிலிருந்து GCC நாடுகள் என அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையானது ஆண்டுதோரும் உயர்ந்து கொண்டே வருகிறது. துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 மற்றும் கத்தாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போதும் வெளிநாடுகளிலிருந்து பலரும் வளைகுடா நாடுகளை சுற்றிப்பார்க்க வருகை தந்திருந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு GCC நாடுகளை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மைகளுக்காக, ஐரோப்பாவை போன்று ‘ஷெங்கன்–ஸ்டைல்” விசாவை GCC நாடுகள் அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது ஒரே விசாவை கொண்டு GCC நாடுகளான UAE, சவூதி, கத்தார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலாவாசிகள் பயணிக்க முடியும். இதனால் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பஹ்ரைனில் அரேபிய பயணச் சந்தையில் (Arabian Travel Market), சுற்றுலா அமைச்சர் பாத்திமா அல் சைராபி அவர்கள் பேசுகையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக GCC நாடுகளுக்கிடையே ‘ஒருங்கிணைந்த ஒற்றை விசாவை (unified single visa)’ எவ்வாறு அடைவது என்பது குறித்து GCC நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டிலிருந்து ‘ஷெங்கன் விசாவில்’ ஐரோப்பாவை சுற்றிப்பார்க்க செல்லும் மக்கள், பொதுவாக ஒரு நாட்டில் இருப்பதை விட பல நாடுகளில் தங்கள் நேரத்தை செலவிடுவதை நாங்கள் காண்பதாகவும், இதுபோன்று அனைத்து GCC நாடுகளுக்கும் செல்லும் வகையில் ஒற்றை விசா விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் துபாயில் உள்ள அரேபிய பயண சந்தையில் நடைபெற்ற “The Future of Travel for the GCC” என்ற குழு விவாதத்தின் போது, UAE மற்றும் சவுதி அரேபியாவுடன் இணைந்து நாட்டை ஊக்குவிப்பதன் மூலம் பஹ்ரைன் பயனடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் 2022-ம் ஆண்டில் நாங்கள் இலக்காக நிர்ணயித்த 8.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை விடவும் அதிகமாக, 9.9 மில்லியன் பேர் பஹ்ரைனிற்கு வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து குழு விவாதத்தின் போது பொருளாதார அமைச்சகத்தின் துணைச் செயலர் அப்துல்லா அல் சலேஹ் என்பவர் பேசுகையில், அனைத்து GCC நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை முக்கியமானது என்று நம்புவதாகக் கூறியுள்ளார். மேலும் “பல்வேறு நாடுகளுக்கு தடையின்றிச் செல்வதன் மூலமும், எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்குவதன் மூலமும், GCC யில் உள்ள பல்வேறு நாடுகளுக்குச் செல்ல ஒரு தொகுப்பை இணைத்துக்கொள்வதன் மூலமும் பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைச்சர்கள் GCC நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும், நாட்டினரின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும், நிலையான சுற்றுலாத் துறையை உறுதிப்படுத்தவும் ஒரு ஒருங்கிணைந்த GCC சுற்றுலா உத்தியை வகுத்துள்ளதாகவும் அவர் கூறியிள்ளார்.
அதுபோல, GCCயில் உள்ள அனைத்து இடங்களையும் ஊக்குவிக்கும் புதிய அப்ளிகேஷன் மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், GCC-யை சுற்றுலாப் பயணிகளுக்கான தனித்துவமான இடமாக எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து எங்களுக்குள் ஒப்பந்தம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சவூதி சுற்றுலா ஆணையத்தின் CEO ஃபஹத் என்பவர் கூறுகையில், இன்றைய காலங்களில் பயணிகள் சுற்றுலா செல்வதற்கு ஒரு நாட்டைப் பற்றி நினைக்கவில்லை, பல நாடுகள் இணைந்த ஒரு பிராந்தியத்தைப் சுற்றிப்பார்க்க நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வருங்கால பயணிகள் எப்பொழுதும் பல நாடுகள், பல வழித்தடங்கள் மற்றும் பிராந்தியங்களைப் பார்வையிடுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
GCC நாடுகளின் இந்த புதிய திட்டமானது கூட்டு சலுகைகளை ஊக்குவித்து அனைவருக்கும் பயனளிக்கும் என்பதை பிரதிபலிப்பதகாவும் சுற்றுலா அமைச்சர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கத்தாரில் நடந்த FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வருகை புரிந்த வெளிநாட்டவர்களினால் சவூதி அரேபியாவும் பெரிதும் பயனடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.