UAE: இனி தடுப்பூசி போட்டவர்களுக்கும் அபுதாபிக்குள் நுழைய கொரோனா பரிசோதனை கட்டாயம்..!! அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!!
அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கான விதிமுறைகளை அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த வியாழக்கிழமை புதுப்பித்துள்ளது.
புதிய விதிமுறைகளின் படி, தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட வரும் திங்கள்கிழமை முதல் அபுதாபியில் நுழைய 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறை முடிவைக் காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது தடுப்பூசி போட்டு அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் ‘E’ அல்லது ‘கோல்டன் ஸ்டார்’ வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு வியாழக்கிழமை வெளியிட்ட தனது அறிவிப்பில் ‘E’ அல்லது ‘கோல்ட் ஸ்டார்’ பெற்றவர்களுக்கு அபுதாபிக்குள் நுழைய PCR சோதனைக்கு விலக்கு அளிப்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளின் தன்னார்வலர்கள் ஒரு ‘கோல்டன் ஸ்டார்’ மற்றும் முழுமையாக தடுப்பூசி போட்ட நபர் ‘E’ ஐகானையும் அல்ஹோஸன் அப்ளிகேஷனில் பெறுவார்கள். இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு அபுதாபியில் நுழைய எல்லையில் எதிர்மறை சோதனை முடிவைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டு தற்போது வரையிலும் நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒரு PCR பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் இந்த நபர்கள் தங்கள் அப்ளிகேஷனில் சிறப்பு ஐகானை தக்க வைத்திருக்க முடியும்.
இருப்பினும், ஈத் அல் அத்ஹாவிற்கான பொது விடுமுறை நாட்களின் தொடக்கத்துடன் (July 19) இந்த புதிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதால், திங்கள்கிழமை முதல் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என அனைவருமே சோதனை மேற்கொள்ள வேண்டும் என இக்குழு குறிப்பிட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவு அல்லது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட DPI முடிவு உள்ளவர்களுக்கு மட்டுமே இனி அபுதாபிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
மேலும், அபுதாபிக்குள் நுழைந்த பிறகு கூடுதல் சோதனைகளை எடுக்க வேண்டும் எனவும் என பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, PCR சோதனை மேற்கொண்டு அபுதாபியில் நுழையும் நபர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்கினால் நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் கூடுதல் PCR சோதனைகளை எடுக்க வேண்டும். அதேபோல், DPI சோதனை மேற்கொண்டு அபுதாபியில் நுழைந்தவர்கள் மூன்றாவது மற்றும் ஏழாவது நாட்களில் கூடுதலாக PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அல்ஹோஸன் அப்ளிகேஷனில் ‘E’ அல்லது ‘கோல்டன் ஸ்டார்’ ஐகான் வைத்திருப்பவர்களுக்கு இந்த கூடுதல் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
புதிய வகை கொரோனா பரவலைத் தடுப்பதற்கும் தொடர்ச்சியான சோதனைகளை உறுதி செய்வதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.