PCR டெஸ்டும் இல்லை.. தனிமைப்படுத்தலும் இல்லை.. கட்டுப்பாடுகளை தளர்த்திய பஹ்ரைன்…!!
கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகள் தளர்த்தி வரும் பட்சத்தில் தற்பொழுது பஹ்ரைன் நாடும் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் பஹ்ரைனுக்கு வந்திறங்கும் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் PCR பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பஹ்ரைன் சிவில் ஏவியேஷன் விவகார அறிக்கையில், நாட்டிற்குள் நுழைந்த பிறகு பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது கொரோனா பாதித்த நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், ‘Be Aware’ செயலியில் “கிரீன் ஷீல்டு” இல்லாதவர்கள் ஆகியோரும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மருத்துவப் பணிக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறைகளை மேலும் எளிதாக்கும் நடவடிக்கையில், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு COVID-19 பரிசோதனையை மேற்கொள்வதற்கான தேவையை கட்டுப்படுத்துவதாகவும் பணிக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மற்ற தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பணிக்குழு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.