ஓமான் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முந்தைய PCR சோதனை மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு..!!
ஓமானில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த விசா வழங்கும் சேவையானது தற்பொழுது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓமானுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமானத்தில் பயணிப்பதற்கு முன் மேற்கொள்ளப்படும் Covid-19 பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானின் பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தனது சமீபத்திய பயண புதுப்பிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “சுற்றுலாப் பயணிகள் ஓமானுக்கு வருவதற்கு முன்பு PCR சோதனை மேற்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் ஓமான் வந்தடைந்ததும் விமான நிலையத்தில் அவர்கள் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஓமானுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவர்கள் ஓமானில் தங்கியிருக்கும் காலத்தில் COVID-19 சிகிச்சையின் செலவுகளை உள்ளடக்கிய சர்வதேச சுகாதார காப்பீடை கட்டாயம் வைத்திருப்பது, ஹோட்டலில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருத்தல், ரிடர்ன் டிக்கெட் உள்ளிட்ட வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஓமான் வரும் சுற்றுலா பயணிகள் அவர்கள் விமான நிலையம் வந்தடையும் முன்பே emushrif.om.covid19 என்ற லிங்கில் சென்று அவர்கள் ஓமான் விமான நிலையத்திற்கு வந்து சேரும் போது மேற்கொள்ளவிருக்கும் PCR சோதனைக்காக பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் தாராசுத் பிளஸ் திட்டத்தில் (Tarassud Plus program) அவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையின் முடிவு வரும் வரை சுற்றுலா நிலையத்தில் உள்ள சுகாதார தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கையில் ஓமான் நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே ஓமான் நாட்டில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் அவர்களின் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வரும் வரையிலும் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும், பிற நபர்களுடன் தங்கும் அறைகளைப் பகிர்ந்து கொள்ளவோ அல்லது மற்றவர்களுடன் ஒன்று கூடவோ கூடாது வேண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
சுற்றுலா குறித்த மற்ற வழிகாட்டுதல்களில் சுற்றுலாவாசிகள், சுற்றுலா நிறுவனம் மூலமே தவிர தனிப்பட்ட முறையில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு அவர்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் மேலும் அவர்கள் சுற்றுலா தொடர்பான நடைமுறைகள் மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஓமானில் தற்பொழுது சுற்றுலா விசாக்கள் மீண்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில், தனது நாட்டின் சுற்றுலா இயக்கத்திற்கு ஆதரவாகவும், ஓமானுக்கு வருகை தர விரும்பும் பயணிகளுக்கு வசதியாகவும், இந்தியா உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் ஓமானிற்கு வருகை புரிய அனுமதி வழங்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு ஓமான் அரசு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.