இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாட்டினருக்கு புதிய வேலை அனுமதி பெற தற்காலிக தடை..!! பஹ்ரைன் அறிவிப்பு..!!
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான இந்தியா, இலங்கை உள்ளிட்ட ரெட் லிஸ்டில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு புதிய பணி அனுமதி வழங்குவதை பஹ்ரைன் அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவானது நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தொற்றுநோயைக் கடக்க நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.
கொரோனா தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கான தேசிய மருத்துவக் குழுவின் மதிப்பீட்டின்படி அவ்வப்போது சிவப்பு பட்டியலில் (red list) உள்ள நாடுகள் சேர்க்கப்படுகின்றன அல்லது அகற்றப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பஹ்ரைனுக்குள் நுழைய கடந்த மே 24 ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ம் தேதியில் இருந்து வியட்நாமில் இருந்து பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இருப்பினும் இந்த நாடுகளைச் சேர்ந்த பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் இன்னும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் பஹ்ரைனுக்கான விமானத்தில் ஏறுவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கோவிட் -19 PCR சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும். பஹ்ரைன் வந்தவுடன், வருகையின் போதும் மற்றும் நாட்டில் தங்கிய பத்தாம் நாளிலும் மற்றொரு PCR சோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும் பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் இல்லத்தில் அல்லது தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற தனிமைப்படுத்தல் மையத்தில் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.