உலகிலேயே மிக நீண்ட காலமாக பிரதமராக பணியாற்றி வந்த பஹ்ரைன் பிரதமர் காலமானார்..!!
உலக நாடுகளிலேயே மிக நீண்ட காலமாக பிரதமராக பதவி வகித்த பஹ்ரைன் நாட்டின் பிரதமரான மாண்புமிகு இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் (Mayo Clinic Hospital) காலமானார் என்று அந்நாட்டின் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு தற்போதைய வயது 84.
பஹ்ரைன் நாட்டின் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா அவர்கள் மறைந்த பிரதமருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அதே நேரத்தில் அந்நாட்டில் அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகள் வியாழக்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் இருந்து பிரதமரின் உடல் பஹ்ரைன் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதற்குப் பிறகு அவரின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டில் பஹ்ரைன் சுதந்திரம் பெறுவதற்கு ஒரு வருடம் முன்னதாக 1970 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை என 50 வருடங்களாக அவர் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இறந்ததை தொடர்ந்து உலகிலுள்ள தலைவர்கள் பலரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.