ஓமைக்ரான் எதிரொலி: இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்கவிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தள்ளிவைப்பு..!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பால் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை டிசம்பர் 15 முதல் நீக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது பல்வேறு நாடுகளில் ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த முடிவை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் முதன் முறையாக இந்திய அரசானது சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்தது. பின்னர் குறிப்பிட்ட நாடுகளுக்கிடையே ஏர் பபுள் ஒப்பந்தம் மூலம் சிறப்பு விமான சேவைகள் தற்பொழுது வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த தடை காரணமாக 20 மாதங்களுக்கும் மேல் சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு சமீபத்தில் அதற்கு அனுமதி அளித்திருந்த நிலையில் தற்பொழுது இந்த முடிவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு அறிக்கையில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைகளை இந்தியாவிற்கும் இந்தியாவிலிருந்தும் மீண்டும் தொடங்கும் தேதி குறித்த முடிவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும் புதிய கோவிட் மாறுபாடான ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.