ஓமானில் வெளிநாட்டவர்கள் 4WD வாகனங்களை வைத்திருக்க தடை.. நாடு முழுவதும் தீயாய் பரவிய செய்தி.. பதில் அளித்த காவல்துறை..!!
ஓமன் நாட்டில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் தங்களின் சொந்த பயண்பாட்டிற்காக 4WD வகை நான்கு சக்கர வாகனங்களை இனி சொந்தமாக வைத்திருக்க முடியாது என்று அரசு பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டதாக கடந்த ஜூலை 4ம் தேதி நாடு முழுவதும் செய்தி தீயாக பரவியது.
மேலும், சட்டவிரோதமான பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு விநியோக சேவைகளை வழங்குவதற்காக வெளிநாட்டிவர்கள் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ராயல் ஓமன் காவல்துறை (ROP) இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
அத்துடன், வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான 4WD வாகனங்கள் கண்டறியப்பட்டால், அந்த வாகனம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று பரிசீலிக்கப்படும் எனவும், புதிய வாகனப் பதிவு ROP ஆல் நிராகரிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஃபேமிலி விசாவின் கீழ் இருந்தால் அவர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், அதேபோன்று தங்களின் தொழிலுக்கு மிகவும் தேவைப்பட்டால் அரசாங்கத்தின் அனுமதியின் பெயரில் வெளிநாட்டவர்கள் 4WD வாகனங்களை பதிவு செய்ய முடியும் என்றும் நாடு முழுவதும் இந்த செய்தி தீயாய் பரவியது.
மேலும் அந்த செய்தியில், ஏற்கனவே நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதனை வெளிநாட்டவர்களுக்கு விற்க முடியாது என்றும், இவை தவிர மினி, நடுத்தர அல்லது கூபே டிரக்குகள் உட்பட வணிக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிக்கப் டிரக்குகளை சொந்தமாக வைத்திருப்பதையும் ROP தடை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் மேலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஒத்த பதவிகள் போன்ற குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மட்டுமே அத்தகைய வாகனங்களை சொந்தமாக வைத்திருக்கவும், பதிவு செய்யவும் முடியும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், வணிக நோக்கங்களுக்காக 4WD அல்லது பிக்கப் டிரக்கைப் பயன்படுத்தும் பொழுது வெளிநாட்டவர் பிடிபட்டால், அவர்களுக்கு 35 ஓமன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஒருவர் மீண்டும் அதே தவறை செய்யும் பட்சத்தில் வழக்கானது நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றும் ROP எச்சரித்ததாக செய்திகள் வெளிவந்தன.
இத்தகைய அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டு குடியிருப்பாளர்களிடையே பெரும் குழப்பத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஃபேமிலி விசாவில் இல்லாத, வெளிநாட்டைச் சேர்ந்த பல சாகசப் பிரியர்கள் மற்றும் பெரிய SUV வகை கார்களின் மீது ஈரப்பு உள்ளவர்கள் என பெரும்பாலானவர்கள் 4WD கார்களை பயண்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த செய்திகள் நாடு முழுவதும் தீயாக பரவி வந்த நிலையில் ஓமன் காவல்துறை இதற்கு பதிலளித்து ஜூலை 6ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஓமானில் வசிக்கக்கூடிய வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் அல்லது பெண் என எவரும் மேற்கூரிய (4WD) வாகனங்களை தங்களின் பெயரில் பதிவு செய்வதற்கு தடை ஏதும் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.
تابعت شرطة عمان السلطانية ما تم تداوله حول حظر تملك الأجنبي للسيارات ذات الدفع الرباعي وتوضح بأنه لا يوجد ما يمنع الأجنبي من تسجيل المركبات المذكورة خلال فترة تواجده في سلطنة عمان.#شرطة_عمان_السلطانية pic.twitter.com/esqnhodDKy
— شرطة عُمان السلطانية (@RoyalOmanPolice) July 6, 2023