கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக 100 க்கும் குறைவான நபர்கள் கொரோனாவால் பாதிப்பு..!! ஓமான் சுகாதார அமைச்சகம் தகவல்..!!
ஓமானில் உள்ள சுகாதார அமைச்சகம் (MoH) இன்று (புதன்கிழமை, டிசம்பர் 23,2020) புதிதாக 93 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 128, 236 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய கடந்த 8 மாதங்களில், ஒரு நாளில் மட்டும் 100 க்கும் குறைவான நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 13 ம் தேதி ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல் முறையாக ஓமான் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவிற்கு ஒரு நபர் உயிரிழந்துள்ளதால், ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 1,491 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரையிலும் கொரோனா பாதித்து குணமடைந்தோரின் மொத எண்ணிக்கை 120, 178 ஐ எட்டியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் எட்டு பேர் கொரோனாவின் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓமான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.