சவூதி: மக்காவில் உள்ள புனித மசூதியில் முதன் முறையாக பெண் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்..!! புகைப்படங்களை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்..!!
சவூதி அரேபியாவில் இருக்க கூடிய இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் உள்ள மசூதியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்திய வரலாற்று சீர்திருத்தங்களைக் குறிக்கும் வகையில் மசூதியில் முதன்முறையாக பெண் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணியில் இருந்த பெண் பாதுகாப்பு அதிகாரிகளின் புகைப்படங்களை சவுதி உள்துறை அமைச்சகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
வழிபாட்டாளர்களின் பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டும் அதே நேரத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்து கொண்டும் பணியில் இருக்கும் பாதுகாப்பு சீருடையில் உள்ள பெண் காவலர்களின் புகைப்படங்களை அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
நாட்டில் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்காக மகுட இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசிஸ் இயற்றிய தொடர்ச்சியான சீர்திருத்தங்களில் சவுதி அரேபியா தனது உள் பாதுகாப்புப் படைகளில் பெண்களை அனுமதிக்க சமீப காலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் விஷன் 2030 (vision 2030) முன்முயற்சியின் கீழ், சவூதி பெண்கள் பல்வேறு துறைகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.