UAE : இரு வாரத்தில் 24,000 க்கும் மேற்பட்ட கொரோனா விதிமீறல்கள் பதிவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான சுகாதார பாதுகாப்பு விதிகளை மீறுவதற்கு எதிராக அமீரக அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளதால், இரண்டு வாரங்களில் 24,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் விதிமீறல்களுக்கான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகம் 24,894 குற்றங்களை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விதிமீறல்கள் துபாயில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், புஜைரா, உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களில் பதிவாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தஹேரி அவர்கள் கூறுகையில், “கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், கூறுகையில், “81 சதவீத குற்றங்களுடன் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், அரேபியர்கள் 19 சதவீதத்திலும் உள்ளனர். கொரோனாவிற்கான விதிமீறல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியத் தவறுதல், வாகனத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மீறி பயணம் செய்தல் போன்ற குற்றங்களை புரிந்தவர்கள்” என்றும் டாக்டர் அல் தஹேரி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 23 முதல் கிட்டத்தட்ட அரை மில்லியன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 6,643 நோய்தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1 சதவீதத்திற்கு சமம் என்றும், இருப்பினும், இறப்பு விகிதம் 0.1 சதவீதத்திலிருந்து 0.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 23 முதல் பதிவு செய்யப்பட்ட அனைத்து கொரோனா பாதிப்புகளையும் ஒப்பிடுகையில் ஆண்கள் 62 சதவீதம், பெண்கள் 38 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் (58 சதவீதத்தினர்) 25 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.