வளைகுடா செய்திகள்

டிசம்பர் 7 முதல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீட்டு தொழிலாளர்கள் குவைத் திரும்ப அனுமதி..!!தனிமைப்படுத்தல் கட்டணம் 270 KD என அறிவிப்பு..!!

குவைத் நாட்டில் வரும் டிசம்பர் 7 முதல் வெளிநாட்டில் இருக்கும் குவைத்தில் பணிபுரியும் வீட்டு தொழிலாளர்கள் மீண்டும் குவைத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பையொட்டி தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் குவைத்தில் தொடங்கப்பட்டாலும் இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குவைத்திற்கு இயக்கப்படும் விமான சேவைகளானது தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த நாடுகளில் இருந்து குவைத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீண்டும் குவைத் திரும்ப முடியாத சூழல் உருவாகியது.

இந்நிலையில், தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து குவைத்தில் பணிபுரியும் வீட்டு தொழிலாளர்கள் நாட்டிற்குத் திரும்ப குவைத்தின் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரெக் அல் மஸ்ரேம் அவர்கள் கூறியுள்ளார். மேலும் குவைத்திற்கு மீண்டும் வரவிருக்கும் வீட்டு தொழிலாளர்கள் அவர்கள் குவைத் வந்திறங்கியவுடன் இரு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு குவைத் திரும்பும் தொழிலாளர்கள் குவைத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பதற்கு 270 குவைத் தினார் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது விமான பயணக்கட்டணத்தை தவிர்த்து, தனிமைப்படுத்தலில் பயணிகள் தங்கும் இடம், உணவு, போக்குவரத்து, PCR சோதனை ஆகியவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த தொழிலாளர்களின் ஸ்பான்சர்கள் அவர்கள் தங்கள் தொழிலாளிகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து அவர்கள் குவைத் ஏர்போர்ட் வந்தடைந்ததும் அவர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்லும் பணியை நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதே போல், ஒரு நாளைக்கு 600 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 4 அல்லது 5 மாதங்களுக்குள்ளாகவே சுமார் 80,000 வீட்டுத் தொழிலாளர்கள் குவைத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!