எதிஹாட் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இலவச ‘எக்ஸ்போ 2020 துபாய்’ டிக்கெட்டை அறிவித்த விமான நிறுவனம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் அபுதாபிக்கு அல்லது அபுதாபி வழியாக வேறோரு நாட்டிற்கு பயணிக்கும் பயணிகள் இப்போது எக்ஸ்போ 2020 துபாய்க்கான இலவச டிக்கெட்டைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் துவங்கவிருக்கும் உலகளாவிய நிகழ்வான எக்ஸ்போ 2020 துபாய் கண்காட்சியானது, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கி அடுத்த ஆறு மாத காலத்திற்கு அதாவது மார்ச் மாதம் இறுதி வரையிலும் துபாயில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச எக்ஸ்போ 2020 டிக்கெட் குறித்து எதிஹாட் கூறுகையில், “பார்வையாளர்கள் எக்ஸ்போ 2020 யை கண்டு மகிழவும், அபுதாபி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடவும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும் சிறப்பு பிரச்சாரம் நேற்று (செப்டம்பர் 23) முதல் மார்ச் 31, 2022 வரை நடைபெறும்” என்று எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் எக்ஸ்போ 2020 துபாய் நடைபெறவிருக்கும் இடமானது அபுதாபியில் இருந்து 45 நிமிட பயண தொலைவில் அமைந்துள்ளது
“எக்ஸ்போ 2020 எதிஹாட் ஏர்வேஸுக்கு பல அற்புதமான வாய்ப்புகளைத் தருகிறது, மேலும் இந்த நிகழ்வை அனுபவிக்க உலகை அழைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று எதிஹாட்டின் விருந்தினர் அனுபவம், பிராண்ட் & மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் டெர்ரி டேலி கூறியுள்ளார்.
முன்னதாக துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் ஆகியவை இந்த எக்ஸ்போ நிகழ்வுக்கு ஒரு நாள் பாஸ்களை இலவசமாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.