வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவசமாக எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்..?? விதிமுறைகள் என்ன..??
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விடுமுறைக்காக இந்தியா திரும்பும் போது தனது குடும்பத்தாருக்கு தங்க நகைகள் வாங்கி செல்வது காலம் காலமாகவே நடந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இந்தியா பயணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்கநகை கொண்டு சென்றால் அரசின் விதிமுறைப்படி சுங்க வரி செலுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் அயராது கஷ்டப்பட்டு உழைத்து வரும் பணத்தில் குடும்பத்திற்கென நகை வாங்கி செல்லும் போது சுங்க வரியும் செலுத்த வேண்டியிருந்தால் சிரமம்தான். இதனை தவிர்க்க வேண்டுமானால் இந்தியா செல்லும் நபர் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி பயணிகள் எவ்வளவு தங்கம் கொண்டு செல்லலாம் என்பது குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பயணி ஒருவர் தங்க நகை கொண்டு சென்றால் அதன் மொத்த மதிப்பு ஆண் பயணியாக இருந்தால் 50,000 ரூபாயாகவும் பெண் பயணியாக இருந்தால் 100,000 ரூபாயாகவும் இருக்க வேண்டும். இந்த பண மதிப்பிற்குள் அவர்கள் நகை எடுத்துச் சென்றால் சுங்க வரி செலுத்த தேவையில்லை. ஆனால் பயணி ஒருவர் வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கும் குறைவாக தங்கியிருந்து தங்க நகை வாங்கி சென்றால் சுங்க வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
மேலும் வெளிநாட்டில் ஓராண்டிற்கும் மேலாக தங்கிய ஒரு பயணி இந்தியாவிற்கு இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் தங்கநகை மதிப்பை விட கூடுதலான மதிப்பில் தங்க நகை எடுத்துச் செல்ல விரும்பினால் அவர்கள் கூடுதலான நகைகளுக்கு அதன் மதிப்பில் குறிப்பிட்ட சதவிகிதம் சுங்க வரியாக செலுத்த வேண்டும்.
மேலும் இந்தியப் பயணி ஒருவர் 1 கிலோவுக்கு மேல் தங்கம் கொண்டு சென்றால், இந்திய சந்தையின்படி தங்கத்தின் விலையில் 36.05 சதவீதத்தை சுங்க வரியாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.