வெறும் 3,990 ரூபாயில் சென்னையில் இருந்து மஸ்கட் பயணிக்கலாம்..!! ஸலாம் ஏர் விமான நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு..!!
ஓமானில் சர்வதேச விமானப் போக்குவரத்து அக்டோபர் 1 ம் தேதி மீண்டும் துவங்கப்பட்டதில் இருந்து வெளிநாடுகளில் இருந்து ஓமான் வரும் குடியிருப்பாளர்கள் ஓமானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெறத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஓமான் வருவது எளிதான பட்சத்தில் இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டதை தொடர்ந்து ஓமான் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனங்களும் இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்கி வருகின்றன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக ஓமான் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனமான ஸலாம் ஏர் விமான நிறுவனம் இந்தியாவின் சென்னை உட்பட சில முக்கிய நகரங்களுக்கு சிறப்பு விமான சேவைகளை இயக்குவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் இருந்து ஓமான் வரும் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஸலாம் ஏர் சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. தற்பொழுது இந்தியாவில் இருந்து ஓமானிற்கு திரும்பும் பயணிகள் ஸலாம் ஏர் விமானங்களில் பயணிப்பதற்கு வெறும் 20 ஓமான் ரியால்களே செலவாகும் என்று அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3990 ரூபாய் ஆகும்.
ஸலாம் ஏர் விமானமானது இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே போடப்பட்ட ஏர் பபுள் ஒப்பந்தத்தை தொடர்ந்து, சென்னைக்கும் மஸ்கட்டிற்கும் இடையே வாரத்திற்கு ஒரு முறை விமான சேவையினை வழங்கி வருகிறது. இந்த விமானங்களில் பயணிப்பவர்கள் 20 கிலோ செக்-இன் லக்கேஜ் மற்றும் 7 கிலோ ஹேண்ட் லக்கேஜ் எடுத்து செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.