அதிகரித்து வரும் கொரோனா.. இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்கும் ஓமான்..!!
ஓமானில் அதிகரித்து வரும் கொரோனா பரவலினால் ஓமானின் தொற்றுநோயைக் கையாள்வதற்கான உச்சக் குழு நாட்டில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அடுத்த இரு வாரத்திற்கு அமலில் இருக்கும் என்றும் ஞாயிறு (ஜனவரி 23) முதல் கட்டுப்பாடுகள் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் அரசு மற்றும் பிற பொது நிறுவனங்களின் அலுவலகங்களில் இருந்து பணிபுரிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் பணியிடத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தினசரி தொழுகை நடத்த அனுமதி வழங்கபட்டாலும் வெள்ளிக்கிழமை தொழுகையானது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையானது இடத்தின் திறனில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் மத விவகார அமைச்சகம் அறிவித்த பிற முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளின்படி பிரார்த்தனைகள் நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஒத்திவைக்கப்படும் மற்றும் பொது இயல்புடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும் அல்லது மூடிய அரங்குகளில் பார்வையாளர்களின்றி (closed door) நடத்தப்பட வேண்டும் மற்றும் அதற்கு வருகை புரியும் பங்கேற்பாளர்கள் தடுப்பூசிக்கான ஆதாரம் உட்பட அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவகங்கள், கஃபேக்கள், கடைகள் மற்றும் நிகழ்வு அரங்குகள் போன்ற இடங்கள், அவற்றின் இருக்கை திறனில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் முறையாக கடைப்பிடிக்குமாறும் உச்சக் குழு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.