அஜ்மானில் உள்ள ஃபர்னிச்சர் கிடங்குகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலத்தையொட்டி, சமீப காலமாக அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில், அஜ்மானில் இருக்கும் நான்கு ஃபர்னிச்சர் கிடங்குகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அஜ்மானில் இருக்கும் அல் ஜெர்ஃப் தொழில்துறை பகுதியில் (Al Jerf Industrial area) நான்கு ஃபர்னிச்சர் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அஜ்மான் சிவில் பாதுகாப்பு இயக்குனர் பிரிகேடியர் அப்துல் அஜீஸ் அல் ஷம்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 3:27 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வந்ததாகவும் அதனை தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தீயணைப்பு வீரர்களின் விரைவான வருகையால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை. எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு இல்லாமல் தீ கட்டுப்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ஃபர்னிச்சர் கிடங்குகளானது மூன்று வெவ்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று தெரிய வந்துள்ளது.
அஜ்மானில் உள்ள மூன்று நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன் சிவில் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தீயை அணைத்ததாகவும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரிக் அல் ஷம்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.