ரமலான் மாதத்தின் முதல் தேதியை அறிவித்த சவூதி..!! இன்று பிறை தென்படவில்லை என தகவல்..!!
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 21) செவ்வாய்க்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் மார்ச் 23 ம் தேதி (வியாழன்) ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ஆகும். வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் மாதம் 29 நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகின்றது.
இதன்படி பார்த்தால் ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 21 அன்று இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது பிறை பார்ப்பதின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும்.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் மார்ச் 23 ம் தேதியை ரமலான் முதல் நாளாக அறிவித்துள்ளன.