UAE: சமூக நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடை விதித்த அபுதாபி.. 48 மணி நேர PCR சோதனை முடிவும் அவசியம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் தினசரி உயர்ந்து வருவதால் அபுதாபியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்கள் போன்ற சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை திறனை அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு குறைத்துள்ளது.
மேலும் குடியிருப்பாளர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எதிர்மறையான கோவிட் சோதனை முடிவைப் பெற வேண்டும் என்று தெரிவித்திருப்பதுடன், கிரீன் பாஸ் நெறிமுறையை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. அபுதாபி பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் இன்று டிசம்பர் 27 முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுளளது. அவைகள்,
>> திருமணச் சடங்குகள், இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்களில் அதிகபட்சமாக 60 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.
>> உட்புற நிகழ்வுகளில் பங்கேற்க அதிகபட்சமாக 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
>> வெளிப்புற நிகழ்வுகளில் அதிகபட்சமாக 150 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி.
>> வீட்டில் நடத்தப்படும் சமூக ஒன்றுகூடல்களில் 30 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.
>> சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் தங்கள் AlHosn செயலியில் கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டும். (முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே கிரீன் பாஸ் செயலில் இருக்கும்)
>> பங்கேற்பாளர்கள் 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறையான PCR சோதனை முடிவையும் வழங்க வேண்டும்.
>> நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைத்து விருந்தினர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் பாதுகாப்பான சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இணங்குவதை உறுதிசெய்ய அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவால் ஆய்வு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.