“இது தான் துபாய்”.. பொதுமக்களின் திருப்தியை பெற்று 6 ஸ்டாரை பெற்ற முதல் சேவை மையம்.. துபாய் மன்னர் பெருமிதம்..
துபாயில் ஆறு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற முதல் அரசு சேவை மையமாக துபாயில் இருக்கக்கூடிய ஒரு காவல் நிலையம் பெயரெடுத்துள்ளது. துபாயில் இருக்கும் அல் முராக்காபத் காவல் நிலையம் இந்த ஆறு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என துபாயின் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த காவல்நிலையமானது ஆறு நட்சத்திர மதிப்பீட்டை பெற்றதையடுத்து அதனை தெரிவிக்கும் விதமாக ஒரு உலோக பலகையை துபாய் ஆட்சியாளர் அல் முராக்காபத் காவல்நிலையத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
ஆறு நட்சத்திரங்களைப் பெற்று அசத்திய காவல்நிலையம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குவது அதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
இந்த தொழில்நுட்பம் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் செயற்கை நுண்ணறிவு மூலம் காவல்நிலையம் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் கூறியுள்ளார்.
இந்த அரசு சேவை மையம் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பரிவரத்தனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்த சேவையானது ஏழு மொழிகளில் வழங்கப்படுகிறது.
கிடைத்துள்ள தரவுகளின்படி, 99.8% திருப்தியான சேவையாக இருப்பதாக பொதுமக்களால் மதிப்பீடு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரது ட்விட்டர் பதிவில் அவசரநிலைகளுக்கு மையத்தின் பதிலளிப்பு நேரம் ஒன்றரை நிமிடம் மட்டும் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அந்த பதிவில் “இதுதான் துபாய். துபாயோடு போட்டி போட துபாயினால் மட்டுமே முடியும்” என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.