அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகள் என அறிவிப்பு..!! அபுதாபி சுகாதாரத்துறை தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பானது மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 100 க்கும் குறைவாகவே தினசரி நோய்த்தொற்று பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் அபுதாபியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை அபுதாபி சுகாதாரத் துறை (DoH) தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் இனி அபுதாபியில் உள்ள அல் ரஹ்பா மருத்துவமனையை கொரோனா நோயாளிகள் உட்பட தொற்று நோய்களுக்கான பிரத்யேக மருத்துவமனையாக நியமிப்பதாகவும் அபுதாபியில் உள்ள சுகாதாரத் துறையின் ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது.
கூடுதலாக, அபுதாபியில் உள்ள ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டியில் (SKMC) இப்போது கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையில், கொரோனா பாதிப்பு அல்லாத மற்ற நோயாளிகளுக்கு சிறப்பு சுகாதார சேவைகளை வழங்கும் என்ற நிலையை இந்த மருத்துவமனை பெற்று மீண்டும் இயல்பு நிலையில் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது.
SKMC முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டிய கடுமையான ஆய்வுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அமீரகத்தில் தடுப்பூசிகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களைக் கடைப்பிடிப்பதில் விரிவாக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பயன்பாடு ஆகியவையே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறையின் துணைச் செயலர் டாக்டர் ஜமால் முகமது அல்காபி கூறியதாவது, “ஐக்கிய அரபு அமீரகத்தின் புத்திசாலித்தனமான மற்றும் முற்போக்கான தலைமையின் அயராத அர்ப்பணிப்பால் மட்டுமே இந்த நேர்மறையான மாற்றத்தை நாம் காண்கிறோம். பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைக்கும் தேசிய முயற்சிகளானது, ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டியில் தொற்றுநோயை திறம்பட கையாள்வதில் முக்கிய பங்கு வகித்தன” என தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று உட்பட தொற்று நோய்களின் சிகிச்சைக்காக அதன் தயார்நிலையை மேலும் மேம்படுத்த, அல் ரஹ்பா மருத்துவமனை அதன் படுக்கை திறனை அதிகரித்து, மொத்த படுக்கைகளின் எண்ணிக்கையை 250-க்கும் அதிகமாக செய்துள்ளது. இதில் 140 சாதாரண படுக்கைகள், 37 படுக்கைகள் தீவிர சிகிச்சைக்கு (ICU) மற்றும் 73 அறுவை சிகிச்சைக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன.
இனி கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகளாக அபுதாபியில் உள்ள ரஹ்பா மருத்துவமனை, அல் அய்ன் சிட்டியில் உள்ள அல் அய்ன் மருத்துவமனை மற்றும் அபுதாபி முழுவதும் உள்ள மற்ற கள மருத்துவமனைகள் மட்டுமே இருக்கும் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.