அமீரகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 2,500 க்கும் மேல் நோய்த்தொற்று பதிவு…!!
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. டிசம்பர் மாத தொடக்கத்தில் 50 க்கும் குறைவாக பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 2,000 க்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, ஜனவரி 1, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2,556 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 764,493 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,165 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மட்டும் 908 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 745,963 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி பயணிப்பவர்களுக்கு கிரீன் பாஸ் வைத்திருத்தல் அவசியம் என்றும் EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் திருமணங்கள், சமூக ஒன்றுகூடல் போன்றவற்றிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கிரீன் பாஸ் செயல்முறை, PCR சோதனை விதிமுறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.