அமீரகத்தை போன்று வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசாவை அறிமுகப்படுத்திய மற்றொரு வளைகுடா நாடு… விசா பெறுவதற்கான தகுதிகள் என்ன..??
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் இந்த நாடுகளில் தொடர்ந்து தங்குவதற்காக தங்களது விசாக்களை புதுப்பித்துக் கொண்டே இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
சமீபத்தில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள், தொழில் முனைவோர் போன்றோர் கோல்டன் விசா பெறலாம் என அறிவிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து பலரும் இந்த விசாவைப் பெற்று வருகின்றனர்.
அதே போல் மற்றொரு வளைகுடா நாடான பஹ்ரைனும் தற்பொழுது 10 வருட கோல்டன் ரெசிடென்ஸி விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த கோல்டன் ரெசிடென்சி விசா, காலவரையின்றி புதுப்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விசாவின் மூலம் பஹ்ரைனில் பணிபுரியும் உரிமை, வரம்பற்ற என்ட்ரி மற்றும் எக்ஸிட் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கான ரெசிடென்ஸ் உரிமை ஆகியவை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “கோல்டன் ரெசிடென்ஸி விசா முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் பஹ்ரைனின் தற்போதைய வெற்றிக்கு பங்களிக்கக்கூடிய மிகவும் திறமையான நபர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” கூறப்பட்டுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் போன்ற நாடு செயல்படுத்திய தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த விசாவிற்குத் தகுதிபெற, ஒருவர் பஹ்ரைனில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் வசித்திருக்க வேண்டும் மற்றும் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 2,000 பஹ்ரைன் தினார் ($5,306) சம்பளம் ஐந்து வருடங்களில் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு (குறைந்தது 200,000 தினார்) மேல் பஹ்ரைனில் சொத்துக்களை வைத்திருப்பவர்களும், 4,000 தினார் மாதம் பெறும் ஓய்வு பெற்றவர்களும், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மிகவும் திறமையான நபர்களும் இந்த விசாவைப் பெற தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.