UAE: அல் ஹோஸ்ன் கிரீன் பாஸின் செல்லுபடியை 30 நாட்களுக்கு நீட்டித்த அபுதாபி பேரிடர் குழு.. இன்று முதல் அமல்..!!
அபுதாபியில் நடைமுறையில் இருந்து வரும் கோவிட்-19 நெறிமுறைகளை புதுப்பித்து, அனைத்து வணிக நடவடிக்கைகள், சுற்றுலா இடங்கள் மற்றும் நிகழ்வுகளில் முழு இயக்கத் திறனுக்கு திரும்புவதற்கு அபுதாபியின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைகளில் ஒன்றாக, கொரோனாவிற்கான முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு அல் ஹோஸ்ன் கிரீன் பாஸின் செல்லுபடியை 14 நாட்களிலிருந்து 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் பெறுவதற்கு இனிமேல் மாதம் ஒரு முறை கொரோனா PCR பரிசோதனை செய்தால் போதும்.
எனினும் உட்புற இடங்களில் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்பதையும் அபுதாபி பேரிடர் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக வெளியிடப்பட்டிருந்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலில் உட்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், வெளிப்புற இடங்களில் அணிவது சொந்த விருப்பம் எனவும் தெரிவித்திருந்தது.
அபுதாபியின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் குழு அறிவித்துள்ள இந்த புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்று ஏப்ரல் 29 ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், நாட்டில் தொடர்ந்து குறைந்த கோவிட்-19 நோய்த்தொற்றுகளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் பித்ர் விடுமுறையானது நாளை ஏப்ரல் 30 ம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளதும், வரும் திங்கள்கிழமை மே 2 ம் தேதி ஈத் அல் பித்ர் பெருநாளாக கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee has approved a return to 100 per cent operating capacity in all commercial activities, tourist attractions, and events, and the extension of Al Hosn green pass validity to 30 days. pic.twitter.com/M4vfZ8OqnO
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) April 28, 2022