ஈத் அல் ஃபித்ர்: அமீரக தலைவர்கள் பேரக்குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்..!!
ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்கள் ஈத் அல் ஃபித்ரின் போது தங்கள் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
அமீரகத்தில் இந்த ஆண்டு 9 நாள் ஈத் விடுமுறையின் போது தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்த பல குடியிருப்பாளர்களைப் போலவே, அரச தலைவர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சிறந்த தருணங்களை செலவிட்டுள்ளனர். இது அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
துபாயின் அன்புக்குரிய பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் வெள்ளிக்கிழமை ஒரு அரிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், அவரது குடும்பத்தின் பேரக்குழந்தைகள் 23 பேரால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம்.
‘Family’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிடப்பட்ட இந்தப் பதிவில், அவர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அல்லது பண்டிகை உடைகளை அணிந்துள்ளனர்.
அதேபோல் அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நய்ஹான் அவர்கள் தனது பேரக்குழந்தைகளுடன் அரிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
“விடுமுறை மற்றும் பண்டிகை நிகழ்வுகளை குடும்பத்தினருடன், குறிப்பாக எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பு, உண்மையிலேயே கடவுளின் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும். மேலும் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் நேசத்துக்குரிய அம்சமாகும்” என்று அவர் இது குறித்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.